விழுப்புரம் அருகே, கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே, கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jan 2020 10:15 PM GMT (Updated: 4 Jan 2020 8:25 PM GMT)

விழுப்புரம் அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள மோட்சகுளத்தில் மடுகரை செல்லும் சாலையில் பிரசித்தி பெற்ற சாந்த மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக மடுகரையை சேர்ந்த சுரே‌‌ஷ் (வயது 53) என்பவர் இருந்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை கோவிலின் இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்புறம் உள்ள மரக்கதவும் லேசாக உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து திடுக்கிட்டனர். உடனே இதுபற்றி அவர்கள் கோவில் பூசாரி சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர், கோவிலுக்கு விரைந்து வந்து பார்த்தார்.

மேலும் இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார், கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவிலின் இரும்பு கதவு பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் மரக்கதவு பூட்டை உடைக்க முயன்ற சமயத்தில் ஆள் நடமாட்டம் இருந்ததால் மர கதவு பூட்டை உடைக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனால் கோவிலில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக்கவசம் மற்றும் உண்டியல் பணம் கொள்ளைபோகாமல் அதிர்‌‌ஷ்டவசமாக தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story