பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - துறைமுக வழித்தடத்தில் சேவை ரத்து


பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - துறைமுக வழித்தடத்தில் சேவை ரத்து
x
தினத்தந்தி 4 Jan 2020 11:09 PM GMT (Updated: 4 Jan 2020 11:09 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மத்திய ரெயில்வேயின் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 10.39 மணி முதல் பிற்பகல் 3.19 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா - பரேல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரெயில்கள் எல்லா ரெயில்நிலையங்களிலும் நின்று செல்லும். இதனால் சி.எஸ்.எம்.டி.க்கு 20 நிமிடங்கள் வரை தாமதமாக சென்றடையும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக அனைத்து மின்சார ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - பாந்திரா, சுன்னாப்பட்டி இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, கோரேகாவிற்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில் சேவை இருக்காது. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று வழக்கம் போல மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story