பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் கொத்துக்களை வாங்க வியாபாரிகள் குவிந்தனர்


பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் கொத்துக்களை வாங்க வியாபாரிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:30 PM GMT (Updated: 5 Jan 2020 8:34 PM GMT)

பொங்கல் பண்டிகையை யொட்டி மஞ்சள் கொத்துக்களை வாங்க கறம்பக்குடி பகுதியில் வெளியூர் வியாபாரிகள் குவிந்துள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கறம்பக்குடி,

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகள் வாழ்க்கையோடு ஒன்றியதாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும். தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையும் கலாசாரம் சார்ந்ததாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. உணவை மருந்தாக்கி தந்த நமது முன்னோர்கள் மிக சிறந்த கிருமி நாசினியாகவும், வைட்டமின், தாது, நார்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருந்த மஞ்சளை உணவு பொருளாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் உருவாக்கி தந்திருந்தனர்.

மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை மக்கள் மறந்து விட கூடாது என்பதற்காகவே மங்கள பொருளாகவும், தினசரி பயன்பாட்டிற்கு உரியதாகவும் வைத்திருந்தனர். திருவிழா காலங்களில் அதிகமான மக்கள் கூடி களையும் நேரத்தில் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கவே மஞ்சள் நீராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. தமிழர்களின் விழாவான பொங்கல் நாளில் பானைகளில் மஞ்சள் கொத்துக்களை கட்டி வழிபடுவது வழக்கம். பெரிய நகரங்களில் கூட இன்னும் இந்த நடைமுறை மாறாமல் உள்ளது.

வியாபாரிகள் குவிந்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் உள்ள திருமணஞ்சேரி மழையூர், தட்டாவூரணி, துவார், கெண்டையன்பட்டி, மஞ்சு விடுதி, ரெகுநாதபுரம், வெட்டான்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் கொத்துக்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், மஞ்சள் கொத்துக்கள் அறுவடை பணி தொடங்கி உள்ளது. கஜா புயல் பாதிப்பில் மஞ்சள் கொத்துக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையொட்டி மஞ்சள் கொத்துக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நகர பகுதிகளில் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததாலும், விவசாயம் செழித்து உள்ளதாலும் மஞ்சள் கொத்துக்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதையொட்டி வெளியூர் வியாபாரிகள் மஞ்சள் கொத்துக்களை வாங்க கறம்பக்குடி பகுதியில் குவிந்துள்ளனர். இருப்பிடத்திற்கே வந்து நல்ல விலை கொடுத்து மஞ்சள் கொத்துக்களை வாங்கி செல்வதால் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆத்ம திருப்தி

இதுகுறித்து கெண்டையன்பட்டி பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயி நாகேந்திரன் கூறியதாவது:-

மங்கள பொருளாகவும், வழிபாட்டுக்கு உரியதாகவும் உள்ள மஞ்சளை பாரம்பரியமாக சாகுபடி செய்து வருகிறோம். உழைப்பு அதிகம், வருமானம் குறைவு என்றபோதிலும் தமிழர் விழாவுக்கு எங்களது பங்களிப்பு என்பது ஆத்ம திருப்தியாக உள்ளது. இப்பகுதி மண்ணின் தன்மைக்கு மஞ்சள் கிழங்குகள் நன்கு செழித்து வளரும். இதனால் வெளியூர் வியாபாரிகள் எங்கள் பகுதி மஞ்சளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்போது கூடுதலாக சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story