இளையான்குடி அருகே பரிதாபம்: கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை


இளையான்குடி அருகே பரிதாபம்: கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2020 11:30 PM GMT (Updated: 5 Jan 2020 11:14 PM GMT)

இளையான்குடி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியும், கணவனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மறவலசையைச் சேர்ந்தவர் பெரியசாமி. அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி நாகலெட்சுமி (வயது 42).

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பெரியசாமி வேலைக்கு சென்றதும், நாகலெட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியசாமி வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்தபோது தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் உடலை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து இளையான்குடி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியசாமியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்குச் சென்று அவரை அழைத்து வந்து அவரது மனதை தேற்றி அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தனர்.

இதனிடையே நாகலெட்சுமியின் தந்தை கோட்டைச்சாமி தனது மகளின் சாவு குறித்து உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் மன வேதனையில் இருந்த பெரியசாமி விடுதியில் தனது கைலியால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பெரியசாமியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மறவலசை கிராம மக்கள் இளையான்குடி கண்மாய் கரையில் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். பெரியசாமியின் அண்ணன் செல்வம் தனது தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் கொடுத்தார்.

மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பொம்மையசாமி மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிடச் செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு ஆர்த்தி பிரியா (20), அபிமன்யூ (17) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர். கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story