திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் காவலர்


திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் காவலர்
x
தினத்தந்தி 7 Jan 2020 12:06 AM GMT (Updated: 7 Jan 2020 12:06 AM GMT)

திருச்சியில் பணியாற்றி வரும் காவலர், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து, வேறு ஆடைகளை உடுத்தி உணவு வழங்குகிறார்.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சிலர் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிவதை காண முடியும். அழுக்கு உடையுடன் ஆங்காங்கே சாலையோரத்தில் படுத்து கிடக்கும் இவர்களுக்கு ஒருசில தொண்டு நிறுவனத்தினர், நல்ல உள்ளம் படைத்தவர்கள் அவ்வப்போது உணவு வழங்கி அவர்களுடைய பசியை தீர்த்து வருகிறார்கள்.

அந்தவகையில், தமிழ்நாடு சிறப்புகாவல்படை முதலணி, திருச்சியில் பணியாற்றி வரும் காவலர் ரங்கேஸ்வரன் (வயது 25) இதுபோன்ற ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து, வேறு ஆடைகளை உடுத்தி உணவு வழங்குகிறார். திருச்சியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு இதுபோன்று உதவி செய்துள்ளார். காவலர் பணியில் இருந்து கொண்டு அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டியை சேர்ந்த ரங்கேஸ்வரனின் தந்தை குமரன். விவசாயம் செய்து வருகிறார்.

இது குறித்து ரங்கேஸ்வரன் கூறுகையில், “என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு 2017-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தேன். இவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து இதுபோல் சாலைகளில் சுற்றி திரிகிறார்கள். ஒருவேளை அவர்களை தேடி குடும்பத்தினர் வரும்போது, அவர்கள் தற்போது உள்ள தோற்றத்தால், அடையாளம் தெரியாமல் போய்விடும்.

அதனால் தான் அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து வேறு ஆடைகளை உடுத்தி என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். இதுபோல் மற்றவர்களும் உதவ வேண்டும்” என்றார். எந்திரமாக சுழலும் வாழ்க்கையில் எதிர்கால தேவைகளுக்காக ஓடுபவர்களுக்கிடையே ஆதரவற்றோருக்காக நேசக்கரம் நீட்டும் காவலர் ரங்கேஸ்வரனின் பணி பாராட்டுக்குரியதே, என்று அவருடைய சேவையை அறிந்தவர்கள் பாராட்டினர்.

Next Story