விழுப்புரம் மாவட்டத்தில், 7 இடங்களில் சாலை மறியல்; 323 பேர் கைது


விழுப்புரம் மாவட்டத்தில், 7 இடங்களில் சாலை மறியல்; 323 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2020 10:15 PM GMT (Updated: 8 Jan 2020 11:56 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 323 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி, நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துக்குமரன், மூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி சவுரிராஜன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க நிர்வாகி சிவக்குமார், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் முருகானந்தம், கங்காதரன், மின்வாரிய தொ.மு.ச. நிர்வாகி சண்முகம், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகி சலீம், நியாய விலைக்கடை பணியாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் கோபாலகிரு‌‌ஷ்ணன், செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பியபடி விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 185 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் விழுப்புரம் இந்தியன் வங்கி அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, வட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நிதானம், ராமநாதன் உள்பட 17 பேரும், வளத்தி கூட்டுசாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கீதா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 32 பேரும், கண்டாச்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முத்துவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் தனுசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 23 பேரும், திண்டிவனத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இன்பஒளி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த சாலை மறியலில் 323 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story