குளித்தலை அருகே, காரை வாடகைக்கு கேட்ட தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் மீது வழக்கு


குளித்தலை அருகே, காரை வாடகைக்கு கேட்ட தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:30 PM GMT (Updated: 9 Jan 2020 5:53 PM GMT)

குளித்தலை அருகே காரை வாடகைக்கு கேட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழதாளியாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவர் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பஸ்நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குளித்தலை அருகே உள்ள கருங்கலாபள்ளியை சேர்ந்த லோகநாதன், கண்டியூரை சேர்ந்த கார்த்திக், கீழகுட்டபட்டியை சேர்ந்த மனோஜ் குமார் ஆகியோர் மணிகண்டனிடம் வாடகைக்கு கார் கேட்டுள்ளனர். அப்போது 4 பேருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், கார்த்திக், மனோஜ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனின் தலையில் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் லோகநாதன், கார்த்திக், மனோஜ்குமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story