விழுப்புரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன பேரணி - ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு


விழுப்புரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன பேரணி - ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 12:21 AM GMT)

விழுப்புரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை முற்றிலும் திரும்ப பெறக்கோரியும் நேற்று மதியம் 2 மணியளவில் விழுப்புரம் அனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் அ‌‌ஷரப்அலி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் துரை.ரவிக்குமார், பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் விழுப்புரம் நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கோலியனூர், வளவனூர், காணை, விக்கிரவாண்டி, மாம்பழப்பட்டு, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இருந்து அனைத்து முஸ்லிம் அமைப்பினர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சோ‌ஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌‌ஷம் எழுப்பியபடி விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்டன பேரணியாக சென்றனர்.

இந்த பேரணி பூந்தோட்டம் பாதை, ரங்கநாதன் சாலை வழியாக சென்று திருச்சி நெடுஞ்சாலையை அடைந்து அங்கிருந்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முடிவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள், பாரபட்சமா, பாரபட்சமா, மதத்தின் பெயரில் பாரபட்சமா? அஞ்சமாட்டோம், அஞ்ச மாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும், 60 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியை ஏந்தி, கோ‌‌ஷமிட்டபடி சென்றனர்.

அதன் பின்னர் அனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலர், கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று அங்கிருந்த கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படியும் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

Next Story