பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா


பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 3:20 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா மாணவ- மாணவிகளால் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று கல்லூரிகளுக்கு மாணவ- மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். மேலும் கல்லூரி நுழைவு வாயிலில் வாழை மரம், கரும்பு கட்டுகள் கட்டப்பட்டு, வண்ண கோலமிடப்பட்டிருந்தது.

மாணவர்கள் பொங்கலிட்டனர்

கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக ஒவ்வொரு துறையை சார்ந்த மாணவ- மாணவிகளும் மண் பானை வைத்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வந்த போது பொங்கலோ.. பொங்கல்... என்று சத்தமாக கூறி குதூகலத்துடன் இந்த சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் வைப்பதற்கு கல்லூரி பேராசிரியர்களும் உதவி புரிந்தனர். பின்னர் அவர்கள் பொங்கல் பானை முன்பு தங்களது நண்பர்களுடன் நின்று கொண்டு செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாணவர்கள் தப்பாட்டமும், மாணவிகள் கும்மியாட்டமும் ஆடினர்.

இதேபோல் குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் ராஜ்குமார் தலைமையில் மாணவ- மாணவிகள் பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினர். மேலும் அந்த கல்லூரியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு பொங்கல் வழங்கி மகிழ்ச்சிகளை பரிமாறிக்கொண்டனர்


Next Story