2 சப்-இன்ஸ்பெக்டர்களை உருட்டுக்கட்டையால் கொடூரமாக தாக்கிய 3 வாலிபர்கள் ராமநாதபுரம் அருகே பரபரப்பு


2 சப்-இன்ஸ்பெக்டர்களை உருட்டுக்கட்டையால் கொடூரமாக தாக்கிய 3 வாலிபர்கள் ராமநாதபுரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:15 PM GMT (Updated: 11 Jan 2020 6:26 PM GMT)

ராமநாதபுரம் அருகே இரவில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உருட்டுக்கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 வாலிபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி ஒன்றின் அருகில் சிலர் தகராறில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி(வயது 35), நந்தகுமார்(38) ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வாலிபர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

3 பேரையும் போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது அங்கிருந்து நைசாக நழுவி சென்ற ஒரு வாலிபர் ரோட்டின் மற்றொரு பகுதியில் கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து விசாரணை நடத்திக்கொண்டிருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீதும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் 2 பேரும் நிலை குலைந்தனர். இதனை கண்ட மற்ற 2 வாலிபர்களும் கீழே கிடந்த கல் மற்றும் கட்டையால் தலை, கைகளில் தாக்கினர். இதில்  சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி, நந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் அந்த 3 பேரும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயம் அடைந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்களையும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அங்கு விரைந்து வந்து ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு கூறினார்.

ஒருவர் கைது

இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர்களை ெகாடூரமாக தாக்கியவர்கள் உருவம் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, வெள்ளைமாசி வலசை கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 21) என்பவரை பிடித்து கைது செய்தனர். தலைமறைவாக இருந்துவரும் மற்ற 2 பேரையும் தேடிவருகிறார்கள்.


Next Story