எடியூரப்பா டெல்லி பயணம் திடீர் ரத்து; கட்சி மேலிடம் அனுமதி மறுப்பு?


எடியூரப்பா டெல்லி பயணம் திடீர் ரத்து;  கட்சி மேலிடம் அனுமதி மறுப்பு?
x
தினத்தந்தி 11 Jan 2020 11:45 PM GMT (Updated: 11 Jan 2020 6:56 PM GMT)

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவை சந்தித்து பேச முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்ல இருந்த பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தவும், கட்சி மேலிட தலைவர்களின் அனுமதியை பெறவும் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று டெல்லிக்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்திருந்தார்.

மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசவும் எடியூரப்பா தீர்மானித்திருந்தார். இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவின் டெல்லி பயணம் ரத்து செய்யப்படுவதாக நேற்று திடீரென்று அறிவிக்கப்பட்டது.

எடியூரப்பா டெல்லி செல்வதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடியூரப்பாவின் டெல்லி பயணம் ரத்தாகி இருப்பதால் சங்கராந்தி பண்டிகைக்கு பின்பு நடைபெற இருந்த மந்திரிசபை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி பயணம் ரத்து குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக டெல்லி செல்வதற்கு முடிவு செய்திருந்தேன். பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகத்திற்கு அவர் வந்ததும், மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேச இருக்கிறேன். இதன் காரணமாக டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளேன்.

கர்நாடகத்திற்கு வரும் அமித்ஷாவிடம் மந்திரிசபை விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும். அதன்பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story