மாணவர்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தல்


மாணவர்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 9:09 PM GMT)

மாணவர்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் என முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன் அறிவுறுத்தினார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் செயல்முறை போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு தலைமை தாங்கினார். புதுடெல்லி தேசிய புத்தாக்க நிறுவன திட்ட அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கண்டுபிடிப்புகளுக்கான ஆண்டு

அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தை மத்திய அரசு கண்டுபிடிப்புகளுக்கான 10 ஆண்டு காலம் என அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 32 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கண்டுபிடிப்பிற்கான ‘இன்ஸ்பயர்’ விருதாக வழங்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்களுடைய படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக தான் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில கண்காட்சிக்கு தேர்வு

கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளின்கீழ் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டுகளித்தனர். முடிவில் மன்னார்குடி தூயவளனார் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த தருண்சுந்தர், வடக்குபட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த யோகதர்சினி, திருவாரூர் கேந்திர வித்யாலயாவை சேர்ந்த அன்புச்செல்வன் ஆகியோர் மாநில கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிரு‌‌ஷ்ணன், மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் சங்குமுத்தையா, தலைமை ஆசிரியர்கள் கலைவாணன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட அறிவியல் ஒருங்கிணைப்பாளர் பாலு வரவேற்றார். முடிவில் நேர்முக உதவியாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.


Next Story