திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது


திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 Jan 2020 11:14 PM GMT (Updated: 11 Jan 2020 11:14 PM GMT)

திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 1-வது வார்டில் சீதாலட்சுமி(அ.தி.மு.க.), 2-வது வார்டில் சிவகாமி(அ.தி.மு.க.), 3-வது வார்டில் சாமிநாதன்(அ.தி.மு.க.), 4-வது வார்டில் கண்ணம்மாள்(அ.தி.மு.க.), 5-வது வார்டில் சக்திவேல்(அ.தி.மு.க.), 6-வது வார்டில் பழனிசாமி (அ.தி.மு.க.), 7-வது வார்டில் ராஜேந்திரன்(தி.மு.க.), 8-வது வார்டில் ஜெயந்தி (அ.தி.மு.க.), 9-வது வார்டில் சிவபாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.), 10-வது வார்டில் கற்பகம்(அ.தி.மு.க.), 11-வது வார்டில் ரஞ்சிதம்(அ.தி.மு.க.), 12-வது வார்டில் பானுமதி(அ.தி.மு.க.), 13-வது வார்டில் சத்தியபாமா(அ.தி.மு.க.), 14-வது வார்டில் பாண்டியன்(அ.தி.மு.க.), 15-வது வார்டில் லதாபிரியா(தி.மு.க.), 16-வது வார்டில் மலர்விழி(தி.மு.க.), 17-வது வார்டில் ஜனார்த்தனன்(காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதன்படி அ.தி.மு.க. 13 இடங்களையும், தி.மு.க. 3 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கடந்த 6-ந் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ் தேர்தலை நடத்தினார்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் 13-வது வார்டு உறுப்பினர் சத்தியபாமாவும்(அ.தி.மு.க.), 1-வது வார்டு உறுப்பினர் சீதாலட்சுமியும்(அ.தி.மு.க.) போட்டியிட்டனர். காலை 11 மணிக்கு ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சத்தியபாமா 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சீதாலட்சுமி 2 ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு செல்லாதவை. இதன் மூலமாக சத்தியபாமாவுக்கு தி.மு.க. கூட்டணியை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாலையில் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 2-வது வார்டு உறுப்பினர் சிவகாமி(அ.தி.மு.க.) துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு செய்யாததால் துணைத்தலைவராக சிவகாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான ரூபன் சங்கர் ராஜ் வெற்றிச்சான்றிதழை வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சத்தியபாமா, தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமியின் மனைவியாவார்.



Next Story