குருவிகுளம் அருகே, விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை


குருவிகுளம் அருகே, விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2020 11:15 PM GMT (Updated: 12 Jan 2020 5:36 PM GMT)

குருவிகுளம் அருகே விடுதியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவேங்கடம், 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியாபுரம் மேலக்காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் சைக்கிளில் பிளாஸ்டிக் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். 

இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் தங்க பிரியா (வயது 16). இவர் குருவிகுளத்தில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்ததும் விடுதிக்கு சென்ற தங்க பிரியா, விடுமுறை நாளான நேற்று ஊருக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதி அறையில் தனியாக இருந்த தங்க பிரியா நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தங்க பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story