ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை திருமங்கை மன்னன் வேடுபறி இன்று நடக்கிறது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை திருமங்கை மன்னன் வேடுபறி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 Jan 2020 10:30 PM GMT (Updated: 12 Jan 2020 7:18 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று திருக்கைத்தல சேவை நடைபெற்றது. இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நடந்த பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த 6-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அன்று ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் ஆகும்.

ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. அர்ச்சகர்களின் கைகளில் இருந்து நம்பெருமாள் சேவை சாதிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயராகும். இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார்.

வேடுபறி நிகழ்ச்சி

அங்கு மாலை 6 மணி முதல் மாலை 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குசநாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருந்த நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டினார்கள். மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பொது ஜனசேவை நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று(திங்கட்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.15 மணி முதல் மாலை 6.15 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 10.30 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜன சேவையும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

நம்மாழ்வார் மோட்சம்

10-ம் திருநாளான 15-ந் தேதி தீர்த்தவாரியும், 16-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடக்கிறது. இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story