சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 5,417 பேர் எழுதினர்


சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 5,417 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 8:01 PM GMT)

சேலத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 5,417 பேர் எழுதினர்.

சேலம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சேலத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதை பொது ஒதுக்கீட்டின் கீழ் 6,248 ஆண்கள் மற்றும் 922 பெண்கள் என மொத்தம் 7,170 பேர் எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர்.

சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி உள்பட 6 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்கள் முன்பு 10 மணிக்கு முன்பாக தேர்வர்கள் வந்திருந்தனர். இவர்கள் அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பாக இறுதி கட்டமாக ஆர்வமாக படித்து கொண்டு இருந்தனர்.

5,417 பேர் எழுதினர்

இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வர்களுக்கு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற்றது. தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அனைவரையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், டிஜிட்டல் கைக்கெடிகாரம் மற்றும் கால்குலேட்டர் போன்ற எந்த விதமான எலக்ட்ரானிக் கருவிகளும் தேர்வு எழுதும் அறைக்குள் அனுதிக்கப்படவில்லை.

இதையும் மீறி யாராவது எடுத்து செல்வது கண்டு பிடிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த தேர்வை 5 ஆயிரத்து 417 பேர் எழுதினர். 1,753 பேர் தேர்வு எழுதவரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இன்று தேர்வு

இன்று (திங்கட்கிழமை) காவல்துறை ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற உள்ள தேர்வை 463 ஆண்கள் மற்றும் 97 பெண்கள் என மொத்தம் 560 பேர் எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

Next Story