நெல்லையில் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேச்சு


நெல்லையில் குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 5:07 PM GMT)

நெல்லையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இந்த ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு போலீசார் அணிவகுப்பு மற்றும் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். தேவையான எண்ணிக்கையில் தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும். வருவாய்த்துறையினர் சுதந்திர போராட்ட தியாகிகளை பொன்னாடை அணிவித்து கவுரவிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் விழா மேடைக்கான பந்தல் அமைத்து பார்வையாளர்கள் அமர்வதற்கான சாமியானா பந்தல்களை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கல்வித்துறையினர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையினர் போதுமான பணியாளர்களுடன் தீயணைப்பு வண்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், துணை கலெக்டர் (பயிற்சி) அனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story