திருச்சியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 750 கிலோ குட்கா பறிமுதல்


திருச்சியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 750 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:15 PM GMT (Updated: 13 Jan 2020 6:35 PM GMT)

திருச்சியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 750 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி, 

திருச்சி பால்பண்ணை பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனரின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அப்போது குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த குடோனில் புகுந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காந்திமார்க்கெட் போலீசாருக்கு தனிப்படையினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் குடோனில் இருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குட்காவை பதுக்கி வைத்திருந்த சிவக்குமார் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் விசாரணையில், அந்த குடோனில் இருந்து மாநகர பகுதியில் உள்ள பெட்டிகடைகள் மற்றும் டீக்கடைகளுக்கு குட்கா வினியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்காவை கடைகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மொபட் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

Next Story