ரூ.60 லட்சத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டும் இருளில் மூழ்கும் பாம்பன் ரோடு பாலம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ரூ.60 லட்சத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டும் இருளில் மூழ்கும் பாம்பன் ரோடு பாலம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:15 PM GMT (Updated: 13 Jan 2020 8:10 PM GMT)

ரூ.60 லட்சத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டும் மீண்டும் பாம்பன் ரோடு பாலம் இருளில் மூழ்கி உள்ளது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம், 

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு பாலத்தில் சாலை போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அது போல் ரோடு பாலத்தில் பல மாதங்களாக இருபுறமும் உள்ள மின் விளக்குகளில் பெரும்பாலான விளக்குகள் எரியாமல் இருந்து வந்ததால், மாலை 6 மணிக்கு மேல் இரவு முழுவதும் ரோடு பாலம் இருளில் மூழ்கி காணப்பட்டு வந்தது.

இதையடுத்து பாம்பன் ரோடு பாலத்தின் ஒரு பகுதியில் துருப்பிடித்து எரியாமல் இருந்த மின் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு ரூ.60 லட்சத்தில் பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதிதாக 68 மின் கம்பங்கள் மற்றும் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட மின்விளக்குகளும் ஒரு சில நாட்கள் மட்டுமே எரிந்தன. அதன்பின்பு தொடர்ந்து எரியவில்லை.

இதனால் கடந்த சில மாதங்களாக ரோடு பாலம் மாலை 6 மணிக்கு மேல் இரவு முழுவதும் இருளில் மூழ்கி வருகிறது. மேலும் பாலத்தில் பல மின்கம்பங்கள் சேதமான நிலையிலும் சில மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் எந்தநேரத்திலும் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது விழும் வகையில் அபாய நிலையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் பாலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றவோ, விளக்குகளை எரிய விடவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் அலட்சிய போக்கால் பாலம் இருளில் மூழ்கி வருவதோடு, பெரும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பாலத்தில் உள்ள சேதமான மின் கம்பங்களை அகற்றி, பாலத்தில் உள்ள அனைத்து மின் விளக்கு களையும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இரவில் ரோடு பாலம் பிரகாசமாக இருக்க கலெக்டர் நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story