மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர்- தொழிலாளி பலி - சுரண்டை அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர்- தொழிலாளி பலி - சுரண்டை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 9:00 PM GMT)

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவரும், தொழிலாளியும் பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த பால்துரை மகன் சதீஷ்குமார் (வயது 21). இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

சுரண்டை அருகே சாம்பவர்வடகரை மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் ஊரைச் சேர்ந்த செல்லத்துரை மகனான தொழிலாளி தினேஷ்குமார் (20) என்பவர் வந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தினேஷ்குமார் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story