மத்திய அரசு பணி தேர்வு எழுத வந்தபோது சோகம்: ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயர் பலி - மற்றொருவரை தேடும் பணி தீவிரம்


மத்திய அரசு பணி தேர்வு எழுத வந்தபோது சோகம்: ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயர் பலி - மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:00 PM GMT (Updated: 13 Jan 2020 10:44 PM GMT)

மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுத சென்னை வந்த என்ஜினீயர், நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பலியானார். மாயமான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் நரசிம்மா(வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதுவதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். தேர்வு எழுதி முடித்த பின்னர், நரசிம்மா தனது நண்பர்களான கோகுல்(22), அரவிந்த்சாமி (25), அருண்குமார் (28) ஆகியோருடன் பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றார்.

பின்னர் நண்பர்கள் 4 பேரும் கடலில் ஒன்றாக குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை ஒன்று நரசிம்மா மற்றும் கோகுல் இருவரையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அரவிந்த்சாமி மற்றும் அருண்குமார் இருவரும் கூச்சலிட்டனர்.

உடனே அங்கிருந்த சிலர் ஓடிவந்து ராட்சத அலையில் சிக்கித்தவித்த நரசிம்மாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கோகுல், ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த சாஸ்திரிநகர் போலீசார், மீட்கப்பட்ட நரசிம்மாவை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள், நரசிம்மா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ராட்சத அலையில் சிக்கிய அவர், நீரில் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராட்சத அலையில் சிக்கி மாயமான கோகுலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story