அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: அதிகாரி தகவல்


அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:52 PM GMT (Updated: 13 Jan 2020 10:52 PM GMT)

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

அவினாசி,

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆகும். 50 லட்சம் விவசாயிகளின் 60 ஆண்டு கனவு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அவினாசியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து இந்த திட்டத்துக்காக ரூ.1652 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன் அணையில் இருந்து உபரிநீர் எடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டம் காரமடை வரை செல்லும் திட்டம் ஆகும். குழாய் மூலம் உபரிநீர் எடுத்து செல்லப்பட்டு 105 கிலோ மீட்டர் தூரம் வழியோரம் உள்ள 1045 குளம், குட்டைகளுக்கு நீர்நிரப்பப்படும்.

தற்போது இதற்கான பணிகள் ஈரோடு மாவட்டம் நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குழாய் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பாக தமிழக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தால் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்து உள்ளது. இந்த திட்டத்தை 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக கூடுதலான கட்டுமான எந்திரங்களும், பணியாட்களும் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 24 மாதங்களில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story