பொங்கல் பண்டிகையையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிப்பு


பொங்கல் பண்டிகையையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 8:21 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து கூடுதலாக 3 மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை 3 நாட்களும் காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் முன்னதாக காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது. இதுபோல், மாலை 4 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும். இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story