போலி பில் தயாரித்து ரூ.40 கோடி மோசடி கோவை தொழில் அதிபர் கைது


போலி பில் தயாரித்து ரூ.40 கோடி மோசடி கோவை தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2020 10:15 PM GMT (Updated: 14 Jan 2020 5:36 PM GMT)

போலி பில் தயாரித்து ரூ.40 கோடி மோசடி செய்த கோவை தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் முகமது ஆரீப். இவர் அலியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் விநாயக் டிரேடிங், ஸ்டார் இன்டர்நேசனல் ஆகிய நிறுவனங்களும் இவரது பெயரில் உள்ளன. இந்த நிறுவனங்களின் பெயரில் போலி பில்களை தயாரித்து, தொழில் நிறுவனங்களுக்கு சரக்குகளை சப்ளை செய்யாமலேயே சப்ளை செய்ததுபோல் ஏமாற்றி ஜி.எஸ்.டி. மோசடி செய்தது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் போலி பில்களை கொடுத்து மோசடிக்கு முகமது ஆரீப் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.40 கோடி மோசடி

மொத்தம் ரூ.40 கோடிக்கு முகமது ஆரீப் ஜி.எஸ்.டி. மோசடி செய்து உள்ளார். முகமது ஆரீப்புடன் சேர்ந்து, 15 பேர் கொண்ட மாபியா கும்பல் 50-க்கும் மேலான நிறுவனங்களுக்கு போலி பில்களை தயாரித்து சப்ளை செய்து உள்ளனர்.

மேலும் போலியாக தயார் செய்யப்பட்ட பில்கள் மூலம் வங்கிகளில் ரூ.170 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தொழில் அதிபர் கைது

இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. முகமது ஆரீப்புக்கு ரூ.5 கோடி சென்னை ஐகோர்ட்டு அபராதம் விதித்தது. இதில் ரூ.2 கோடியை அவர் செலுத்தினார். ரூ.3 கோடி அபராத தொகையை அவர் செலுத்தவில்லை. வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் அபராத தொகையை செலுத்த உத்தரவிட்டது. இந்த நிலையில் மோசடி தொடர்பாக முகமது ஆரீப் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story