பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்


பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்
x
தினத்தந்தி 15 Jan 2020 12:00 AM GMT (Updated: 14 Jan 2020 5:54 PM GMT)

பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, 

பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சுவர்களில் வாசகங்கள்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுபோல, பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மங்களூருவில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகி இருந்தனர்.

அதே நேரத்தில் மைசூரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் நளினி, சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையுடன் கலந்து கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக...

அதாவது பெங்களூரு எம்.ஜி.ரோடு அருகே சர்ச்தெரு பகுதியில் உள்ள சுவர்கள் மற்றும் கடைகளின் இரும்பு ஷெட்டர்களில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்றும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். ஒரு தீவிரவாத அமைப்பும் என்றும், சுதந்திர காஷ்மீர் என்றும் எழுதப்பட்டு இருந்தது.

இதுதவிர பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சுவர்கள் மற்றும் ஷெட்டர்களில் எழுதி போடப்பட்டு இருந்தது. மேலும் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வாசகங்களும் சுவர்களில் எழுதப்பட்டு இருந்தது. அந்த வாசங்கள் அனைத்தையும் மர்மநபர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். இதை பார்த்து நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் கப்பன்பார்க், அசோக்நகர் போலீசார் சர்ச்தெருவுக்கு விரைந்து சென்று, அங்குள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் எழுதி போடப்பட்டு இருந்த வாசகங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவில் சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் மர்மநபர்கள் குடியுரிமை திருத்த சட்டம், பிரதமர் மோடிக்கு எதிராக வாசகங்களை எழுதி இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த வாசகங்களை எழுதிய மர்மநபர்கள் யார்? என்பது தெரியவில்லை.

சட்டப்படி நடவடிக்கை

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு நிருபர்களிடம் கூறுகையில், "சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் சட்ட விரோதமாக எழுதப்பட்ட வாசகங்கள் தொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், ஈடுபட்டவர்களை பிடிக்க சர்ச்தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்படும்.

வாசகங்களை எழுதிய மர்ம நபர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

கேமராக்கள் ஆய்வு

எம்.ஜி.ரோடு அருகே சர்ச்தெரு பகுதியில் முக்கிய ஓட்டல்கள், கடைகள் அதிகம் உள்ளது. எப்போதும் அப்பகுதி பரபரப்பாக காணப்படும். அப்படி இருந்தும் மர்மநபர்கள் எப்படி? சுவர்களில் வாசகங்களை எழுதி சென்றனர் என்பது தெரியவில்லை. இதையடுத்து, மர்மநபர்களை கைது செய்ய சர்ச்தெரு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவர்களில் வாசகங்கள் எழுதிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story