தேன்கனிக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு பொதுமக்கள் சாலைமறியல்


தேன்கனிக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 6:28 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பா. இவரது மகள் அக்‌ஷயா (வயது 13). இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவி அக்‌ஷயா நேற்று பள்ளி முடிந்ததும் தனது ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். தடிக்கல் அருகில் பஸ் வந்து கொண்டிருந்தது. ஊர் பக்கமாக பஸ் வந்ததால் அக்‌ஷயா படிக்கட்டு அருகில் நின்றதாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இதையொட்டி அங்குள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அக்‌ஷயா பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த சக பயணிகள் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்‌ஷயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து பஸ் டிரைவரான தர்மபுரியை சேர்ந்த சின்ராஜ் என்பவரை தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் சாலைமறியல்

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story