மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 14 Jan 2020 9:45 PM GMT (Updated: 14 Jan 2020 6:54 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்தார். அவரது கணவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்தப்பினார்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் இளமுருகன் மனைவி சுமதி(வயது 35). கணவன்– மனைவி இருவரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் சென்று பொங்கலுக்கான உடைகள், பொருட்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் மருதூருக்கு சென்றனர். 

அப்போது இலையூர் பாலம் அருகே சென்றபோது சாலையோரத்தில் காய வைக்கப்பட்டிருந்து உளுந்து செடிகளை முட்டாக போட்டு வைத்திருந்தனர். இதில் மோட்டார் சைக்கிள் மோதி விழுந்ததில் இளமுருகன் ஹெல்மெட் போட்டிருந்ததால் உயிர் தப்பினார். இவரது மனைவி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story