ஆம்பூர் அருகே, தோல் பொருட்கள் குடோனில் பயங்கர தீ - 6 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது


ஆம்பூர் அருகே, தோல் பொருட்கள் குடோனில் பயங்கர தீ - 6 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 7:43 PM GMT)

ஆம்பூர் அருகே தோல் பொருட்கள் குடோனில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஆம்பூர், 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாங்கி ஷாப் குடியிருப்பு மையப்பகுதியில் அக்பர்பாஷா (வயது 50) என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை குடோன் உள்ளது. துண்டுகளாக்கப்பட்ட தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரிய தொடங்கியது.

இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அது குறித்து ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீப்பற்றி எரிந்த குடோன் மீது இரவு 12 மணியில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் மளமளவென பரவ தொடங்கி கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீ பரவியதால் வாணியம்பாடி மற்றும் பேரணாம்பட்டு பகுதியிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

இதனிடையே மின்வாரியத்துறையினரும் அங்கு வந்து தீவிபத்தால் விபரீதம் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். அதேபோல் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் உமராபாத் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுமக்களை விரைவாக வெளியேற்றினர். தீவிர முயற்சியின் காரணமாக காலை 6 மணியளவில் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அந்த பகுதியில் புகை வந்து கொண்டே இருந்தது. அதன் மீதும் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டே இருந்தனர்.

இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்ததால் ஏற்பட்டதா என உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story