மாங்காடு அருகே, பெயிண்டர் வெட்டிக்கொலை


மாங்காடு அருகே, பெயிண்டர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 8:32 PM GMT)

மாங்காடு அருகே பெயிண்டர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, 

சென்னை மாங்காடு அடுத்த கோவூர், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(வயது 28). பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் நேற்று காலை வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் யுவராஜை காணவில்லை.

இந்தநிலையில் கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கொலையான யுவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ‘நான்சி’ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிதுதூரம் வரை ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கொலையான யுவராஜூக்கு திருமணமாகிவிட்டது. தற்போது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக அவருக்கும், மனைவியின் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை கொலையாளிகள் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் அதிக அளவில் காலி மதுபான பாட்டில்களும் கிடந்தன.

எனவே நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் யுவராஜ் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story