களக்காடு அருகே பயங்கரம்: வாலிபர் வெட்டிக் கொலை - வீடுகளுக்கு தீவைப்பு-பரபரப்பு


களக்காடு அருகே பயங்கரம்: வாலிபர் வெட்டிக் கொலை - வீடுகளுக்கு தீவைப்பு-பரபரப்பு
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 8:16 PM GMT)

களக்காடு அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது சிங்கிகுளம் கிராமம். இங்கு பொங்கல் பண்டிகையையொட்டி கபடி போட்டி நடந்தது. இதில் சிங்கிகுளம், களக்காடு அருகே உள்ள பூலம் கிராம அணிகள் மோதின. அப்போது, விளையாட்டின் போது இரு அணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த சிங்கிகுளம் கிராமத்தினர் பூலம் கிராமத்தை சேர்ந்த சிவனுபாண்டியன் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சுரேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூலம் கிராமத்தை சேர்ந்த சிலர் சிங்கிகுளத்திற்கு சென்றனர். அங்கிருந்த 2 வீடுகளுக்கு தீவைத்ததுடன், 2 வீடுகளின் மீது கற்களை வீசியும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இரு கிராம மக்களையும் அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர். சுரேசை வெட்டிக்கொன்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். 

மேலும் இரு கிராமங்கள் இடையே பிரச்சினை எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story