ஈரோட்டில் மாட்டுப்பொங்கல் கோலாகல கொண்டாட்டம்


ஈரோட்டில் மாட்டுப்பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 9:00 PM GMT)

ஈரோட்டில் மாட்டுப்பொங்கல் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.

ஈரோடு,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாட்டுப்பொங்கலை விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

இதையொட்டி உழவுத்தொழிலுக்கு பயன்படுத்தும் காளை மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஏராளமாள விவசாயிகள் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய மாடுகளை நன்றாக குளிப்பாட்டி அதன் நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டு வைத்தனர்.

சிறப்பு பூஜை

இதைத்தொடர்ந்து மாடுகளின் கொம்புகளுக்கு பல வண்ண நிற பெயிண்டுகளால் வர்ணம் தீட்டினர். மேலும் பலர் மாடுகளின் கொம்புகளில் கட்சி கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்தனர். அதுமட்டுமின்றி மாட்டு வண்டிக்கும் பெயிண்ட் அடிக்கப்பட்டது. மாலை 4.30 மணி அளவில் விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் உள்ள மாட்டு கொட்டகையில் உழவுத்தொழிலுக்கு பயன்படும் ஏர் கலப்பை, மண்வெட்டி உள்பட பல விவசாய பொருட்களை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து அதில் சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் பொட்டு வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

தெப்பம் கட்டுதல்

ஈரோடு வீரப்பம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாட்டு கொட்டகையின் முன்பு தெப்பம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து அதில் பழம் போட்டு நன்கு பிசைந்து மாடுகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். கரும்புகளையும் துண்டு, துண்டாக வெட்டி மாடுகளுக்கு கொடுத்தனர்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்தும் விவசாயிகள் மாட்டுப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடினார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

Next Story