எடப்பாடி அருகே எருதாட்டம்: மாடு முட்டியதில் வாலிபர் சாவு


எடப்பாடி அருகே எருதாட்டம்: மாடு முட்டியதில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2020 10:30 PM GMT (Updated: 17 Jan 2020 7:28 PM GMT)

எடப்பாடி அருகே நடந்த எருதாட்டத்தின் போது மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழந்தார்.

எடப்பாடி, 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வேம்பனேரி கிராமத்தில் அய்யனாரப்பன் கோவில் முன்பு நேற்று எருதாட்டம் நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். அதில் எடப்பாடி செட்டிமாங்குறிச்சியை அடுத்த மோட்டாங்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (வயது 23) என்பவரும் தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

விழாவையொட்டி காளை ஒன்று ஆக்ரோ‌‌ஷத்துடன் துள்ளிக் குதித்து ஓடி வந்தது. அப்போது உத்தரகுமார் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டிருந்தார். அந்தநேரம் துள்ளிக்குதித்து வந்த காளை தனது கொம்பால் உத்தரகுமாரை முட்டி தள்ளியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வாலிபர் உத்தரகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எருதாட்டத்தின் போது மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story