திருவண்ணாமலையில் ரூ.2 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது


திருவண்ணாமலையில் ரூ.2 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2020 9:30 PM GMT (Updated: 17 Jan 2020 7:40 PM GMT)

திருவண்ணாமலையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நல்லவன்பாளையம் சமுத்திரம் கிராமம் முஸ்லிம் தெருவை சேர்ந்த காதர்சாயுபு (வயது 45) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த காதர்சாயுபு, அ‌‌ஷ்ரப்அலி (40) ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வீட்டிற்குள் எடுத்து சென்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் காதர்சாயுபு தப்பியோடி விட்டார். அ‌‌ஷ்ரப்அலி மட்டும் சிக்கினார்.

இதையடுத்து ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 278 மதிப்பிலான 926 பெட்டிகளில் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அ‌‌ஷ்ரப்அலியை கைது செய்தனர்.

Next Story