வியாசர்பாடியில் பயங்கரம் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


வியாசர்பாடியில் பயங்கரம் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Jan 2020 11:00 PM GMT (Updated: 17 Jan 2020 10:32 PM GMT)

வியாசர்பாடியில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் இஸ்மாயில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் சந்தோஷ்குமார்(வயது 22). ரவுடியான இவர் செம்பியம் போலீஸ் நிலையத்தில் சரித்திரபதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று இரவு 8 மணியளவில் சந்தோஷ்குமார் தனது வீட்டில் இருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

ஆனால் மர்மகும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

அவரது வீட்டுக்குள்ளேயே குடும்பத்தினர் கண் எதிரேயே சந்தோஷ்குமாரை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. சந்தோஷ்குமார் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார், கொலையான சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே சந்தோஷ்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையாளிகளை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சுரேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்பட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் தப்பி ஓடிய கொலையாளிகள் 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கொலையாளிகள் கைதானால்தான் சந்தோஷ்குமார் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் வியாசர்பாடி பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story