பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.15 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.20 லட்சம் அதிகம்


பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.15 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.20 லட்சம் அதிகம்
x
தினத்தந்தி 18 Jan 2020 10:30 PM GMT (Updated: 18 Jan 2020 9:38 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.15½ கோடிக்கு மது விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.20 லட்சம் அதிகம் ஆகும்.

கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்றுதனது நண்பர்கள், உறவினர்களுடன் மது அருந்தி உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர். சிலர் அருகில் உள்ள புதுச்சேரிக்கு சென்றும் மது வாங்கி குடித்ததை காண முடிந்தது.

இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. கடலூர் மாவட்டத்தை பொறுத்த வரை மொத்தம் 142 சில்லரை விற்பனை மதுபான கடைகள் உள்ளன. இதில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.2½ வரை மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரிக்கும்.

கடந்த ஆண்டை விட....

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 14-ந்தேதி போகி பண்டிகை அன்று ரூ.4 கோடியே 47 ஆயிரத்து 475-க்கு மது விற்பனையானது. 15-ந்தேதி பொங்கல் அன்று ரூ.6 கோடியே 75 லட்சத்து 58 ஆயிரத்து 325-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 16-ந்தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் அன்று மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி ரூ.4 கோடியே 89 லட்சத்து 18 ஆயிரத்து 835 என 3 நாட்களில் மொத்தம் ரூ.15 கோடியே 65 லட்சத்து 24 ஆயிரத்து 635-க்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். அதாவது கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 3 நாட்களில் மொத்தம் ரூ.15 கோடியே 44 லட்சத்து 84 ஆயிரத்து 350-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story