வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபர் சிக்கினார்; 2 பேருக்கு வலைவீச்சு


வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபர் சிக்கினார்; 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Jan 2020 11:15 PM GMT (Updated: 19 Jan 2020 4:59 PM GMT)

வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிய சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர், 

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே கடையில் வேலை பார்க்கும் காட்பாடியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

நேற்று முன்தினம் இரவு ஜவுளிக்கடையில் வேலை முடிந்தபின்னர், காதல் ஜோடியினர் கோட்டை பூங்காவிற்கு சென்றனர். அங்கு அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

இந்த பூங்காவில் அமர்ந்து இருப்பவர்களை தினமும் இரவு 7.30 மணிக்கே பராமரிப்பு ஊழியர்கள் வெளியேற்றி விடுவர். அதன்பின்னர்தான் இவர்கள் பூங்காவிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு பொதுமக்கள் நடமாட்டமின்றி பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

அங்கு காதல் ஜோடியினர் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களின் அருகே சென்றது. அப்போது அவர்கள் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மரத்தின் அடியில் உட்கார வைத்தனர்.

தொடர்ந்து இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலை அந்த கும்பல் பறித்தனர்.

அதன்பின்னர் இளம்பெண்ணை அந்த கும்பலில் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது அவர் அலறி கூச்சலிட்டுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மர்மகும்பல் இளம்பெண்ணை தாக்கி, காதலனை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். அதையடுத்து அவர் அமைதியானார். அதன்பின்னர் 3 பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் காதல் ஜோடியிடம் இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இரவு 10.30 மணியளவில் இளம்பெண் அவருடைய வீட்டிற்கு சென்றார். அவரின் முகத்தில் காணப்பட்ட காயம் மற்றும் காதில் கம்மல் இல்லாததை கண்ட பெற்றோர் அதுகுறித்து கேட்டனர். அப்போது அவர் கோட்டை பூங்காவில் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மகளைஅடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து கதறியவாறு கூறினார்.

இதனையடுத்து மர்மநபர்களை அடையாளம் காண்பதற்காக பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணின் காதலன் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது அவர் பூங்காவில் நடந்த சம்பவம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரின் அங்க அடையாளங்களை தெரிவித்ததோடு, அவர்கள் கோட்டையின் பின்புறம் வழியாக தப்பி சென்றதையும் கூறினார். அதைத்தொடர்ந்து வேலூர் மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் வேலூர் மக்கான் அருகே பெங்களூரு சாலையில் பெண்ணின் காதலன் கூறிய அங்க அடையாளத்துடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அந்த வாலிபர் வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என்பதும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. வாலிபரிடம் தலைமறைவாக உள்ள 2 பேர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மீதமுள்ள 2 பேரை பிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரையும் விரைவில் பிடித்து விடுவோம். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து மருத்துவ அறிக்கைக்கு பின்னரே தெரிவிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

Next Story