கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் கோலாகலம் ஆற்றுத்திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி


கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் கோலாகலம் ஆற்றுத்திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 5:08 PM GMT)

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

கடலூர்,

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடும் கெடிலம், தென்பெண்ணை ஆறுகளின் கரையோரத்தில் உள்ள கோவில்களில் எழுந்தருளியிருக்கும் சாமிகளுக்கு ஆண்டுதோறும் தை மாதம் 5-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஆற்றுத்திருவிழா என்று அழைக்கப்படும் இந்த விழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதில் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. சாமிகளுடன் சேர்ந்து புனித நீராடி வழிபட்டால் சகலநன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பாடலீஸ்வரர்

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உற்சவர் பல்லக்கில் எழுந்தருளி தென்பெண்ணையாற்றுக்கு நேற்று காலையில் வந்தார். அதேபோல் மேலும் 2 கோவில்களில் இருந்தும் உற்சவர்கள் தீர்த்தவாரிக்காக வந்திருந்தனர்.

பின்னர் பாடலீஸ்வரர் உள்பட 3 சாமிகளுக்கும் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரிக்குப்பின் 3 சாமிகளும் கோவிலுக்கு புறப்பட்டு சென்றன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், திருப்பச்சாவடிமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழாவையொட்டி சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரிலும், மணலூர்பேட்டையிலும் ஆற்றுத்திருவிழா நடந்தது. விழாவை காணவந்த பக்தர்களுக்கு பல்வேறு கிராம நிர்வாகம் சார்பிலும், கோவில் நிர்வாகம் சார்பிலும் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

பக்தர்களை கவர்ந்த உற்சவ மூர்த்தி

புதுச்சேரி சார்காசிமேடு பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட முத்துமாரியம்மனின் பக்கவாட்டில் விநாயகர், சுப்பிரமணியர் நிற்க, அம்மன் நின்ற திருக்கோலத்தில் தனது கரங்களால் குடத்தை பிடித்திருக்க அதில் இருந்து லிங்கத்தின் மேல் பால் விழுவது போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றின் கரையில் ராட்சத ராட்டினம் அமைத்ததையடுத்து அதற்கு சீல் வைக்கப்பட்டது.


Next Story