மாவட்டத்தில் 1,569 மையங்களில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


மாவட்டத்தில் 1,569 மையங்களில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 6:27 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் 1,569 மையங்களில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திருச்சி,

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. திருச்சியில் இம்முகாமை இ.பி.ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1,279 மையங்களிலும், மாநகராட்சியில் 247 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும் என மொத்தம் 1,569 மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நகர் நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம், சமயபுரம், வயலூர் உள்ளிட்ட இடங்களில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும், சுற்றுலா தலங்களிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ரெயில் நிலையம்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் ஓடும் ரெயில்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 470 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இம்முகாமில் மொத்தம் 6,650 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக முகாம் தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மை பொறியாளர் அமுதவள்ளி, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் கோபிநாத், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story