ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெட்டிக்கொலை பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெட்டிக்கொலை பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:15 PM GMT (Updated: 19 Jan 2020 7:56 PM GMT)

மார்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக்கொலை செய்தார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. செல்வராஜ், மனைவி மற்றும் மகன், மருமகளுடன் வசித்து வந்தார்.

இவருக்கு பெரியகுளம் அருகே இன்னொரு வீடு உள்ளது. அந்த வீட்டில் கடந்த 2½ ஆண்டுகளாக செல்வராஜ் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் செல்வராஜூக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை மீண்டும் அவர்கள் இடையே தகராறு நடந்ததாகவும், அப்போது பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளை எடுத்து வந்து, செல்வராஜை வெட்டியதாகவும், பதிலுக்கு செல்வராஜூம் வெட்டியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் அருகில் உள்ள குளத்தில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கும் காயம் ஏற்பட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. செல்வராஜ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கண்காணிப்பு கேமரா

செல்வராஜ் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் சென்று பார்த்த போது, வீடு முழுவதும் ரத்தக்கறையாக காட்சி அளித்தது. மேலும் செல்வராஜ் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வீட்டின் முன்பு 3 பேர் நின்று பேசுவது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த கொலை குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story