மயிலாடுதுறையில் பயங்கரம்: இசைக்கலைஞர் வெட்டிக்கொலை உறவினர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


மயிலாடுதுறையில் பயங்கரம்: இசைக்கலைஞர் வெட்டிக்கொலை உறவினர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Jan 2020 11:15 PM GMT (Updated: 19 Jan 2020 8:03 PM GMT)

மயிலாடுதுறையில் இசைக்கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் மூக்கையன். இவருடைய மகன் மணிகண்டன்(வயது26). இவர் இசைக்குழு நடத்தி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு மயிலாடுதுறையை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணிகண்டன் மற்றும் சேந்தங்குடியை சேர்ந்த வீரையன், பெரியண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 17-ந்தேதி மணிகண்டன், வீரையன், பெரியண்ணன் ஆகியோர் பணம் வைத்து சூதாடினர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரையன், பெரியண்ணன் ஆகியோர் இந்த தகராறு குறித்து மணிகண்டனின் உறவினரான முனுசாமியிடம் முறையிட்டனர்.

வெட்டிக்கொலை

முனுசாமி- மணிகண்டன் இடையே ஏற்கனவே பன்றி வியாபாரத்தில் போட்டி இருந்தது. இதனால் முனுசாமியும் மணிகண்டன் மீது ஆத்திரத்தில் இருந்தார். இதைத்தொடர்ந்து முனுசாமி, வீரையன், பெரியண்ணன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் மணிகண்டன் மயிலாடுதுறை அருகே உள்ள

கீழப்பட்டமங்கலம் ரெத்தினம் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்து சூழ்ந்து கொண்ட

முனுசாமி மற்றும் சிலர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் உடலின் பல பாகங்களில் வெட்டுக்காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து கொலையாளிகள் தப்பி சென்று விட்டனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் கொலை தொடர்பாக போலீசார் அவரது உறவினர் முனுசாமி மற்றும் வீரையன், பெரியண்ணன், ரெங்கசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இசைக்கலைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story