பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா - 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா - 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Jan 2020 10:00 PM GMT (Updated: 19 Jan 2020 9:50 PM GMT)

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பழனி, 

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 2-ந்தேதி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று கொடி படத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பின்னர் காலசந்தி பூஜையில் காப்புக்கட்டு, அதைத்தொடர்ந்து கொடிக்கட்டு மண்டபத்தில் விநாயகர் பூஜை, கொடிபூஜை, வாத்திய பூஜை நடக்கிறது. தொடர்ந்து கொடிப்படத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவாரபாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமார சுவாமி வள்ளி- தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் வீதிஉலா வருகிறார். காலை 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி 4 ரதவீதிகளில் உலா வருதலும் நடக்கிறது.

8-ந்தேதி தைப்பூசம் அன்று காலை 5 மணிக்கு சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்று தேரோட்டம் நடைபெறுகிறது.

11-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story