பாம்பன் ரோடு பாலத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு; ஒருவர் காயம்


பாம்பன் ரோடு பாலத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு; ஒருவர் காயம்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 10:36 PM GMT)

பாம்பன் ரோடு பாலத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

பனைக்குளம்,

ராமநாதபுரத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனம் ராமேசுவரத்தில் மீன் ஏற்றுவதற்காக வந்தது. இந்த வாகனத்தை ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி சாலையில் சரக்கு வாகனம் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

அப்போது அந்த வழியாக தங்கச்சிமடத்தில் இருந்து மண்டபத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் விழுந்தது. அதில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒருவர் சாவு இதில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகன் நவீன் (வயது 35) என்பவர் இறந்து போனார். மற்றொருவரான ரூபின் (35) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோடு பாலத்தின் நுழைவு பகுதி சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வாகனம் கிரேன் மூலம் அகற்றப்பட்டது.

Next Story