காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - வருவாய்த்துறை அதிகாரி தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - வருவாய்த்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:30 PM GMT (Updated: 20 Jan 2020 12:01 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 508 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் சின்ன காஞ்சீபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,088 மையங்களில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 508 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் என மொத்தம் 3,870 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்கா போன்ற இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 24 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தவறாமல் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருப்பினும், இந்த முறையும் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்்த்தி கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பழனி, காஞ்சீபுரம் நகர நல அலுவலர் முத்து, மாவட்ட மலேரியா அலுவலர் பரணிகுமார், சின்ன காஞ்சீபுரம் சுகாதார மருத்துவ அலுவலர் சத்தியராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு நல திட்ட அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story