மயிலாடுதுறை, நாகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


மயிலாடுதுறை, நாகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 10:30 PM GMT (Updated: 20 Jan 2020 8:29 PM GMT)

மயிலாடுதுறை, நாகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகவேல் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை காவிரி நகரில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் காந்திஜிரோடு, பூக்கடைத்தெரு, கூறைநாடு, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு, பூம்புகார் ரோடு வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வந்தடைந்தது.

துண்டு பிரசுரங்கள் வினியோகம்

ஊர்வலத்தின்போது தலைக்கவசம் உயிர்க்கவசம், மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர், போதையில் பயணம், பாதையில் மரணம், வளைவில் முந்தாதே வாழ்க்கையை தொலைக்காதே, சாலை விதிகளை பின்பற்று விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கு போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டன.

இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலத்தில் சென்றனர். நிகழ்ச்சியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் சங்கர் மற்றும் சங்க உறுப்பினர்கள், இருசக்கர வாகன வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

நாகை

இதே போல் நாகையில் 31-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கருப்புசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மாரியப்பன், கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நேற்று பெண்களுக்கான ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாகை அவுரித்திடலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பப்ளிக் ஆபீஸ்ரோடு, காடம்பாடி, பால்பண்ணைச்சேரி உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் திரளான பெண்கள் ஹெல்மெட் அணிந்தபடி கலந்துகொண்டனர்.


Next Story