எல்லா மொழிகளையும் நேசிப்போம், தமிழை சுவாசிப்போம் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு


எல்லா மொழிகளையும் நேசிப்போம், தமிழை சுவாசிப்போம் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2020 10:30 PM GMT (Updated: 21 Jan 2020 7:22 PM GMT)

எல்லா மொழிகளையும் நேசிப்போம், தமிழை சுவாசிப்போம் என்று வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

ஆற்காடு,

வேலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில், திருவள்ளுவர் தின விழா மற்றும் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தலைவர் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிஞர் ஜோதி வரவேற்றார்.

விழாவில் திருக்குறள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எனக்கு தமிழ் வளர்க்கும் சாமியார்களை மட்டுமே பிடிக்கும். உலகத்தின் மூத்த மொழிகள் ஏழு. அவற்றில் இந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும். அந்த 7 மொழிகளில் பல மொழிகள் வழக்கில் இல்லை. நிலையாக இருக்கும் மொழி தமிழ் மொழி மட்டுமே. தமிழில் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். உலகில் திருக்குறளுக்கு இணையான நூல் இல்லை. திருக்குறளை படிப்பது மட்டுமல்லாமல் அதன்படி நடக்க வேண்டும்.

எல்லா மொழியையும் நேசிப்போம்

திருக்குறள், உலகில் 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளில் தமிழ் இல்லை, கடவுள் இல்லை. மதம் இல்லை. பள்ளி கல்வியில் தமிழகம் 75 சதவீதமும், உயர்கல்வியில் 50 சதவீதமும் உள்ளோம். எண்ணிக்கையில் அதிகமாக உள்ளோம் ஆனால் தரத்தில் உயரவில்லை.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர்கள் வைப்பதில்லை, வடமொழி கலந்த பெயர்கள் அதிகமாக உள்ளது. தமிழ் இயக்கம் சார்பில் 50 ஆயிரம் தமிழ் பெயர்கள் கொண்ட நூல் வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழில் பேச வேண்டும், எல்லா மொழியையும் நேசிப்போம், தமிழ்மொழியை சுவாசிப்போம். அனைவரது வீட்டிலும் திருக்குறள் இருக்க வேண்டும். நாள்தோறும் திருக்குறள் படிக்க வேண்டும். அதன்படி நடந்தால் நமது வாழ்க்கை மாறிவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறருக்காக வாழக்கூடாது

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:-

உலகத்தை புரட்டி போட்ட புத்தகங்கள் ஏராளம். உலக மானுடத்தின் வழிகாட்டியாக உள்ள நூல் திருக்குறள். எல்லோரும் முகமூடி அணிந்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். இதனால் சொந்த முகத்தை இழக்கிறார்கள்.

எல்லோரிடமும் தகுதியும் திறமையும் உள்ளது. எல்லோரும் சிகரத்தை தொட முடியும். சாதிக்க நினைத்ததை சாதிக்க முடியும். அதனை இளைய தலைமுறையினர் செய்ய வேண்டும். நாம் எப்போதும் நமக்காக வாழ வேண்டும், ஆணும், பெண்ணும் கலந்து நட்பு வாழ்க்கை வாழ வேண்டும். பிறருக்காக வாழக்கூடாது. நமக்காக வாழும் போது உண்மையாக வாழ முடியும். அன்பையும், அறிவையும் ஏந்திக்கொண்டு திருக்குறள் வழியில் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரங்கம் திறப்பு

இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ஜெ.லட்சுமணன், புலவர் பதுமனார், அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கு.சரவணன், ஆற்காடு தமிழ்நாடு துணிக்கடை உரிமையாளர் சவுகத் அலி, கண்ணன் ஸ்விட் லேண்ட் உரிமையாளர் கே.பாஸ்கரன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அரங்கத்தை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் திறந்து வைத்தார். முடிவில் பொருளாளர் சிவனார் அமுது நன்றி கூறினார்.


Next Story