முக்கூடல் அருகே பட்டப்பகலில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

முக்கூடல் அருகே நேற்று பட்டப்பகலில் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகைகள்-ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
முக்கூடல்,
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி புதுகிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியன். இவர் அம்பையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக வேலைபார்்த்து வருகிறார். நேற்று சுப்பிரமணியன் அலுவலகத்துக்கு வேலைக்கு சென்றார். இவரது மனைவி காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் நேற்று மதியம் அம்பை அலுவலகத்தில் இருந்து நெல்லை அலுவலகத்துக்கு செல்லும் வழியில் பாப்பாகுடி புதுகிராமத்திலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர் பாப்பாக்குடி போலீசாரிடம் புகார் செய்தார். தகவல் அறிந்த அம்பை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நெல்லையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு பஸ் நிறுத்தத்தில் உள்ள பாழடைந்த வருவாய்த்துறை அலுவலகம் வரை சென்று திரும்பி வந்துவிட்டது.
கைரேகை நிபுணர் அகஸ்டா கண்மணி அந்த வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டுக்தவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,‘ என்ஜினீயர் மற்றும் மனைவி ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது’. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story