ஊராட்சி தலைவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


ஊராட்சி தலைவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 Jan 2020 10:30 PM GMT (Updated: 22 Jan 2020 8:18 PM GMT)

ஊராட்சி தலைவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பயிற்சி முகாமில் பெரம்பலூர் கலெக்டர் சாந்தா அறிவுறுத்தினார்.

பெரம்பலூர்,

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பயிற்சி முகாமிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள், துணைத் தலைவர்கள் அரசிற்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக திகழ வேண்டும். நீங்கள் அனைவரும் அரசாங்கம் மூலமாக பொதுமக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து தங்கள் ஊராட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

மேலும் பயிற்சி முகாமில் அரசியை-மைப்பு ஆணைகள், கிராம ஊராட்சித்தலைவர், துணைத்தலைவர்களுக்கான பொறுப்புகள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாலிங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story