திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Jan 2020 11:30 PM GMT (Updated: 22 Jan 2020 8:27 PM GMT)

திருமணமான 4 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை, 

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள் (வயது 38). இவர் போலீசில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரது மகள் ராஜேஸ்வரிக்கும் (30) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் சென்னை மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார் ராஜேஸ்வரி உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், “எனது அக்கா ராஜேஸ்வரி கடந்த 20-ந்தேதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் எனது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், ‘நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்து விட்டால் சொத்து அனைத்தும் எனக்கே கிடைக்கும்’ என்று கூறி தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என கூறி அழுதார்.

மேலும் எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டியும் எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று எனது அக்கா கூறினார்.

நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போதே, எனது அக்கா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. எனவே எனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

Next Story