வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்


வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2020 10:45 PM GMT (Updated: 23 Jan 2020 7:21 PM GMT)

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம், 

தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணையின் படி, படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி உள்ளது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடையும் காலாண்டுக்கு தகுதியுடைய வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் கோரிமேட்டில் உள்ள சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இதனை பெறுவதற்கு பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் புதிய ஆன்லைன் அடையாள அட்டை போன்ற அனைத்து அசல் சான்றுகளுடன் நேரில் வந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் தவிர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியுடன் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் முற்றிலும் வேலை இல்லாதவராக இருக்க வேண்டும். சுய வேலை வாய்ப்பிலும் ஈடுபட்டு இருக்க கூடாது. மேலும் எந்தவொரு அரசு நிதியுதவியையும் பெறுபவராக இருக்க கூடாது. இதற்கான விண்ணப்பங்களை பெற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் பிற சான்றுகளுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் நேரில் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story