திருச்சி மத்திய சிறையில் கைதிகளை தாக்கிய ஜெயிலர், வார்டர்கள், டாக்டர் மீது வழக்கு


திருச்சி மத்திய சிறையில் கைதிகளை தாக்கிய ஜெயிலர், வார்டர்கள், டாக்டர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:30 PM GMT (Updated: 23 Jan 2020 8:56 PM GMT)

திருச்சி மத்திய சிறையில் கைதிகளை தாக்கிய ஜெயிலர், வார்டர்கள், டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கே.கே.நகர்,

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரையை சேர்ந்த முனுசாமி(வயது 25), திருச்செல்வம் ஆகியோர் திருச்சி சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 5-ந் தேதி சிறை வார்டர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம், ஜெயிலர் ரமேஷ் ஆகியோர் சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முனுசாமி, திருச்செல்வம் ஆகியோர் கைதிகளின் சீருடை அணியாமல் இருந்தனர். இது தொடர்பாக கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிறை வார்டர்கள் மற்றும் ஜெயிலர் சேர்ந்து கைதிகள் 2 பேரையும் தாக்கினர்.

இதில் காயம் அடைந்த அவர்களுக்கு சிறை டாக்டர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயிலர் உள்பட 4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து முனுசாமி திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் சிறை வார்டர்கள், ஜெயிலர், டாக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு இதுகுறித்து விசாரணை நடத்த கே.கே.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெயிலர் ரமேஷ், வார்டர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம் மற்றும் டாக்டர் ஆகிய 4 பேர் மீதும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story